சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
tamil news: ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல பாடசாலைக்கு அருகில் கைதான 34 வயதான சந்தேகநபர் தொடர்பில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் தொடர்பில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை(07.02.2025) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவற்துறைப்பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலைக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைதான சந்தேகநபர் சம்மாந்துறை பகுதி புளக் ஜே கிழக்கு 03 பிரிவு பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன் சந்தேக நபர் வசமிருந்து 1 கிராம் 60 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தது.
அத்துடன் சந்தேகநபர் உட்பட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை காவற்துறை நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி காவற்துறை பரிசோதகர் ஏ.பி.ஏ. தில்சான் தலைமையிலான விசேட அதிரடிப் படை அதிகாரிகள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.