பிரபாகரனது மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்டு எனது தந்தை வருத்தம் அடைந்தார்; கூறுகிறார் நாமல்
tamil news:
"தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும், எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் மனவருத்தம் அடைந்தார்."
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமூகஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பிரபாகரனின் மகனது மரணச்செய்தி அதிகாலையில் கிடைக்கப்பெற்றது.
இந்தச்செய்தியைக் கேட்டு எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார்.
எனது தந்தை மிகவும் கவலை அடைந்து நான் பார்த்த சந்தர்ப்பம் இதுதான்.
அதிகாலையில் வந்த அந்த தொலைபேசிச் செய்தி தொடர்பில் இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது.
பிரபாகரனின் இளையமகன் போரில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதால் எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார்.
இந்த மரணம் வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல, தவறுதலாக(க்ரோஸ் பயரிங்) நடந்தது.
பிரபாகரனின் மகன் வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என சிலர் கதைகளை உருவாக்கினர், உண்மை அதுவல்ல.
இது தவறுதலாக நடந்த விடயம் என்பதுகூட பின்னர்தான் தெரியவந்தது.
போர்காலத்தின் போது எனது தந்தை மிகவும் மனம் வருந்திய சம்பவம் இதுவாகத்தான் இருக்கும்."
என குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு இனப்படுகொலைப்போரின்போது தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது இளைய மகன் பாலச்சந்திரன் அவர்களுக்கு பிஸ்கேட் கொடுத்தபிறகு நெருக்கத்தில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.