வடக்கில் தேசிய மக்கள் சக்தி வரலாற்றுச் சாதனையாம் – பிதற்றுகிறார் பிமல் ரத்நாயக்க
tamil news:
வடக்கு மாகாணத்தில் 150 உறுப்பினர்களை வென்றிருப்பது தேசிய மக்கள் சக்திக்கான மிக முக்கியமான வரலாற்றுச் சாதனையாகும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(07.05.2025) மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
பாரம்பரிய அரசியலை மிஞ்சிய முன்னேற்றம்
அமைச்சர் மேலும் கூறியதாவது,
"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பாரம்பரிய அரசியல் கட்சிகளைவிட மேலோங்கிய வெற்றியை பெற்றுள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணத்திலேயே 150 உறுப்பினர் இடங்களை கைப்பற்றியுள்ளது.
மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி கணிசமான ஆதரவுடன் முன்னிலை பெற்றிருப்பதோடு சில பகுதிகளில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மட்டும் 81 உறுப்பினர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
வரலாற்றில் முதன்முறையாக வெற்றி
முன்னைய தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் ஏதும் பிரதிநிதித்துவ இடங்கள் கிடைக்கவில்லை என்பதை நினைவூட்டிய அமைச்சர் இம்முறை 150 உறுப்பினர்கள் வெற்றிபெற்றிருப்பது அந்த இயக்கத்தின் வளர்ச்சியையும், மக்கள் நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் வடக்கில் நிலவி வந்த பாரம்பரிய தமிழ் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன என்றும்,
கிழக்கில் தேசிய அடையாளத்தின் அடிப்படையில் இயங்கும் கட்சிகள் இடம் பிடித்தாலும்,
தேசிய மக்கள் சக்தி அங்கும் வெற்றியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.