இன்றும் தொடரும் கனமழை; மக்கள் எச்சரிக்கையாக இருக்க எச்சரிக்கை!!!
weather update:
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
வடமத்திய மாகாணம், மன்னார் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை தொடர்ச்சியாக பெய்யக்கூடும்.
இதற்கிடையே, நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த காற்று அபாயம்
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களுடன் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை வீசக்கூடிய பலத்த காற்று பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
நாட்டின் பிற பகுதிகளிலும் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சூழல் உருவாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுரை
இடியுடன் கூடிய மழையால் ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களை குறைக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தீவிர காற்றால் பாதிப்பு
இந்நிலையில் நுவரெலியா பம்பரகலை தோட்டத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் கூரைகள் பறந்து, பல குடும்பங்கள் இடம் மாற்றி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள 4 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
மேலும் நேற்றையதினம்(30.05.2025) மதிய நேரத்தில் திடீரென பலத்த காற்று வீசியதில் கூரைகள் சேதமடைந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
மினி சூறாவளி காரணமாக ஏற்பட்ட சேதம்
தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிராஜ் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கெமுனுபுரத்தில் ஒரு வீட்டு கூரை உட்பட தகரத்தாள் முற்றாக சேதமடைந்ததாக அறியப்படுகின்றது.
குறைந்த நேரத்தில் ஏற்பட்ட பலத்த காற்றினால் இவ்வாறு வீட்டு கூரை சேதமடைந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் அபிவிருத்தி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.