மாவை மறைந்தார்!!! யார் இவர்?
tamil news:
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசா சிகிச்சை பலனின்றி இன்று(29.01.2025) இரவு காலமானார்.
1942 ஒக்டோபர் 27ம் திகதி பிறந்த மாவை சேனாதிராசா அவர்கள் தனது 82வது வயதில் காலமானார்.
இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த மாவை?
மாவை சேனாதிராசா அவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தவர்.
சோமசுந்தரம் சேனாதிராஜா எனும் இயற்பெயர் கொண்ட மாவை சேனாதிராசா யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார்.
வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் இளமைக்கல்வியை கற்றார்.
தொடர்ந்து இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.
அப்போது இலங்கைத் தமிழ்த்தேசிய இயக்கத்தில் செயற்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தவர் 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.
1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு 8 வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.
1972 இல் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.என்.டி.எல்.எப்/ஈ.பி.ஆர்.எல்.எப்/டெலோ/தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார்.
ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 சூலை 13 படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
1999 சூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதையடுத்து மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.
2000ம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (த.வி.கூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.
2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.
2001 தேர்தலில் ததேகூ சார்பாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.
2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
2014, செப்டம்பர் இல் சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
நீண்ட காலம் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராசா,
தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் பெரும் மதிப்பிற்குரியவராக திகழ்ந்தார்.
தமிழரசுக்கட்சியை வடக்குக்கு அப்பால் கிழக்கில் கட்டி எழுப்புவதில் மாவை அவர்கள் ஆற்றிய பணி யாராலும் நிரப்பப்படமுடியாது.
தமிழரசுக்கட்சியை கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் மாவை அண்ணணின் பங்கு அளப்பரியது.
இவ்வாறான பின்னணியில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களின் அண்மைக்கால செயற்பாடுகள் காரணமாக கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார்.
மேலும் கடந்த சில நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



