பிள்ளையானின் தலைமையகத்தில் இரவு நேரச் சோதனை நடவடிக்கைகள் தீவிரம்!!!
tamil news:
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்(TMVP) தலைமை அலுவலகத்தில், கொழும்பிலிருந்து வந்த குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் நேற்றையதினம்(30.05.2025) இரவு வரை தொடர்ந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சோதனைகள், 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி காணாமற்போன கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான்(சி. சந்திரகாந்தன்) கடந்த ஏப்ரல் 8ம் திகதி மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரை தற்போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 மாத தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றையதினம்(30.05.2025) காலை 10 மணியளவில் தொடங்கிய தேடுதல் நடவடிக்கைகள்,
மாலை 7 மணி வரை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் கட்சி பொதுச் செயலாளர் மற்றும் முக்கிய உறுப்பினர் பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த தேடுதல் நடவடிக்கைகள் கட்சி அலுவலகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று அங்கு இருந்தவர்களிடம் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பிள்ளையான் மீது பல்வேறு கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பிள்ளையான் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.