வளிமண்டல சிவப்பு எச்சரிக்கை: கடலோர மக்கள் அவதானம்!!!
tamil news:
வளிமண்டலவியல் திணைக்களம் இன்றையதினம்(28.05.2025) பிற்பகல் 12.30 மணி முதல் நாளை(29.05.2025) பிற்பகல் 12.30 மணி வரை பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடியதென அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வெச்சரிக்கை சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும்,
காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரை அண்டிய கடல் பகுதிகளுக்கு இடையிலான பரப்பை உள்ளடக்கியதாகும்.
தென்மேற்குப் பருவமழையின் காரணமாக, குறிப்பிட்ட இந்த கடல் பிராந்தியங்களில் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் உள்ளதாகவும்,
சில நேரங்களில் கடல் அதீத கொந்தளிப்பை எட்டக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சிலாபம் முதல் கொழும்பு வழியாக காலி வரையிலும்,
காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள பகுதிகளில்
காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீட்டராக அதிகரிக்கலாம்.
இதனால் கடல் நிலை இடைநிலையில் கொந்தளிக்கக்கூடும்.
மேலும் மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடலோரங்களில் அலைகளின் உயரம் சுமார் 2.5 முதல் 3.0 மீட்டர் வரை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
இதில் சில இடங்களில் கடலலைகள் நிலத்தைக் கடக்கக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை முன்னிட்டு மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகங்களுக்காக குறித்த கடல் பகுதிகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் நிலவுவதால் அவதானமாக இருக்கவும்,
அடுத்த அறிவிப்பு வரும்வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.