வீதியை புனரமைக்கக்கோரிய முள்ளியவளை மக்கள்! போராட்டத்தில் குதிப்பு
tamil news: முள்ளியவளை மேற்கு பிரதேசத்தின் நாவலர் வீதியில் வாழுகின்ற மக்கள் தங்கள் பகுதியிலுள்ள வீதிகள் சரியாக புனரமைப்பு இல்லாமல் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக கூறியிருந்தநிலையில் போராட்டம் ஒன்றினை இன்றையதினம்(15.01.2025) நடாத்தியிருந்தனர்.
அதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளை மேற்கு, நாவலர் வீதி 1ம், 2ம் மற்றும் 3ம் குறுக்கு வீதிகள் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாததனால் சமீபத்தில் பெய்த மழைநீர் தேங்கி நிற்கின்றதோடு குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட பாலமும் சீராக அமைக்கப்படவில்லை.
இதனால் ஒவ்வொரு மழைக்காலங்களிலும் வெள்ளநீர் ஓடாமல் தேங்கி நிற்பது வழமை.
அதேபோல நீர்வரத்து அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் வீட்டுக்குள் புகுந்து அங்கு வாழுகின்ற மக்கள் பாதிப்பிற்குள்ளானர்கள்.
அத்தோடு முள்ளியவளை மேற்கு நாவலர் வீதி 1ம், 2ம், மற்றும் 3ம் குறுக்கு வீதிகள் 50 வருடங்களுக்கு மேலாக சீரில்லாமல் மழை காலங்களில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் குறித்த வீதி குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றது.
இதனால் குறித்த வீதியால் பயணிக்கும் அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் பல வருடங்களாக இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இதுதொடர்பில் மு;ளியவளை கிராம மக்கள் கருத்து தெரிவிக்கும்போது,
"2009ம் ஆண்டு இனவழிப்பு போர் முடிவடைந்தும் இதுவரை புனரமைக்கப்படவில்லை.
அவசரதேவைகளான மருந்துவமனைக்கோ, பாடசாலைக்கோ செல்லமுடியாத நிலை இருக்கின்றது.
எமது வீதிகளை பிரதேச சபையோ, மாவட்ட செயலகமோ, தற்போதுள்ள அரசாங்கமோ கவனத்திலெடுத்து அதனை புனரமைக்கவேண்டும்."
என கோரிக்கை விடுத்துள்ளனர்.

