வவுனியா சுகாதார பணிமனை மின்சாரம் துண்டிப்பு! தடுப்பூசிகளின் நிலை?
tamil news: நேற்றையதினம்(15.05.2024) வவுனியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பகுதிக்கான மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டதையடுத்து அங்கு குளிரூட்டியில் வைக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்படமுடியாத நிலைக்குச் சென்றுவிட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது வவுனியா மாவட்ட சுகாதார வைத்திய பணிமனையின் மின்சாரக்கட்டணம் செலுத்தப்படாதநிலையில் நேற்றுக்காலைநேரம் மின்சார சபை ஊழியர்களால் குறித்த அலுவலகத்துக்கான மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு மின்சாரம் இல்லாதநிலையிலும் மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏதுவான சூழல் காணப்படாமையினால் மின்சாரம் அற்றநிலை உருவானது.
ஆனால் அங்கு கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் அங்குள்ள குளிரூட்டிகளில் குறித்த ஊசிகள் காணப்பட்ட நிலையில் மின் துண்டிக்கப்பட்டமையினால் அவை பழுதடைந்துவிடுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து குறித்த தடுப்பூசிகளை பாதுகாக்க வேண்டும் என்பதுடன் மின் கட்டணம் நீண்ட காலமாக செலுத்தப்படாமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் உரிய அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
