சமூக செயற்பாட்டாளர் தாக்கப்பட்ட சம்பவம் – மர்ம நபர்கள் சம்பந்தம்?
tamil news:
மட்டக்களப்பு, கல்லடி திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் இன்றையதினம்(14.05.2025) காலை மர்மநபர்களினால் கடுமையாக தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்பிமலைப் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த செல்வகுமாரை நால்வர் அடங்கிய குழு ஒன்று வழிமறித்து அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
பின்னர் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் கைகளாலும், பொல்லுகளாலும் தாக்கியுள்ளனர்.
இந்தச் சமூகசெயற்பாட்டாளர்,
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்காக ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவர்.
இந்நிலையில் இன்றையதினம்(14.05.2025) அந்த நிகழ்வு இடம்பெறவேண்டியிருந்த போதிலும்,
ஒருவரின் குடும்பச் சூழ்நிலை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்புடையவர்களுக்கு தெரிவிக்கச் சென்றபோதே குறித்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாக்குதல் சம்பவம், தரவை இராணுவ முகாமுக்கும் ஐந்தாம் கட்டை சந்தி இராணுவ முகாமுக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. மர்ம நபர்கள், அரைகுறைத் தமிழில் கேள்விகள் எழுப்பியதையடுத்து, அவரை வனத்திற்குள் இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர்.
பின்னர், அந்த வழியாக வந்த பொதுமக்கள் அவரை மீட்டனர். தற்போது அவர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


