அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்த பிள்ளையான்!
tamil news:
முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) சிறையில் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறையால் தன்னை கைது செய்து தடுப்பில் வைப்பது,
தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்றது என அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன,
குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் இமேஷா முத்துமால,
பதில் காவற்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரிய,
பாதுகாப்பு அமைச்சர் அனுர திஸாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும் மனுவில், கடந்த ஏப்ரல் 8ம் திகதி மட்டக்களப்பில் தனது கட்சிச் செயல்களில் ஈடுபட்டிருந்த வேளையில் குற்றப் புலனாய்வுத் துறையினர் குழுவால் தாம் கைது செய்யப்பட்டதாகவும்,
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் தூங்குவதற்கேனும் போதுமான வசதிகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் வழக்கறிஞர்களை அணுகும் வாய்ப்பு மற்றும் சந்திப்புகள் குறைந்துள்ளதாகவும்,
இது தன் சட்ட உரிமைகளை மீறுவதாகவும் பிள்ளையான் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.