வட்டுவாகல் பாலம் புனரமைப்பு; நிதி ஒதுக்கீடு உறுதி!
tamil news: 2025ம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(22.01.2025) பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் விமல் ரத்நாயக்க இவ்விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமது தொடர்முயற்சிக்கு பலன்கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், சனாதிபதிக்கும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கும், பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்கவிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அதாவது கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ம்திகதி முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த வட்டுவாகல் பாலம் அமைக்கப்படவேண்டுமென கூட்டுறவுப் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 04ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது பாராளுமன்ற முதல் உரையில் வட்டுவாகல் பாலம் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியதுடன், அதனைத்தொடர்ந்து அன்றையதினம் சனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சனாதிபதியுடனான சந்திப்பிலும் இந்த விடயத்தை சனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.
இந்நிலையிலேயே இன்று(22.01.2025) பாராளுமன்றத்தில் அமைச்சர் விமல்ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் வட்டுவாகல்பாலம் அமைப்பதற்கு 2025ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழலில் தமது தொடர்ச்சியான கடும் பிரயர்தனத்திற்கு பலன் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், சனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கும் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கும் கூட்டுறவுப் பிரதிஅமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
