வவுனியா: உளுந்துச்செய்கை முற்றாக அழிவு! விவசாயிகளின் நிலை?
tamil news: சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வவுனியாவில் உளுந்துச்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக வவுனியாவைச் சேர்ந்த விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
தெற்காசியாவை பூர்வீகமாக கொண்ட உளுந்துச்செய்கை இலங்கையில் விளைவிக்கப்படும் தானியங்களில் முக்கியமானது என தெரிவித்த விவசாயிகள்,
வடக்கில் அதிகமாக மேற்கொள்ளப்படுவதுடன் அதற்கான கேள்வியும் அதிகமாக காணப்படுகின்றது.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடன்பட்டு செட்டிகுளம், பாவற்குளம், பறநாட்டாங்கல், சூடுவெந்தபுலவு, சிப்பிக்குளம், ஓமந்தை மற்றும் நெடுங்கேணி என பல பகுதிகளிலும் உளுந்துச்செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வவுனியாவில் 2024 - 2025ம் ஆண்டு காலப்பகுதியில் பெரும் போகத்தில் 5,650 ஹெக்டேயர் அளவில் உளுந்துச்செய்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், நோய் தாக்கத்தினாலும் இம்முறை உளுந்துச்செய்கையாளர்கள் பலர் பாதிப்படைந்துள்ளதுடன் பயிர்ச்செய்கைக்கு செலவுசெய்த பணத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாதநிலையில் உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
அதாவது உளுந்து அறுவடைக்கு தயாராக இருந்தவேளை வவுனியாவில் தொடர்ச்சியாக கனமழை பெய்தமையால் உளுந்து செடிகளிலேயே முளைத்துவிட்டது.
அதனை அறுவடை செய்யமுடியாதநிலையில் தமது செலவீனத்தைக்கூட மீளப்பெற முடியாதவாறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உளுந்து 100% அழிவடைந்தநிலையில் தமக்கான நஷ்ட ஈட்டை அரசாங்கம் வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

