ஏக்கிய ராஜ்ஜிய சதிக் கோட்பாடுகளை முறியடிப்போம்! யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போர்க்கோசம்
tamil new:
"13வது அரசியலமைப்புத்திருத்தம்இ ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பு என்பவற்றினால் தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை குழிதோண்டிப்புதைக்கும் முயற்சிகளை அரசியற்கட்சிகள் எதிர்க்கவேண்டும் என்றும், அனைத்துத்தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தினை முன்னகர்த்துவதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் ஐக்கிய முன்னணியொன்றினை அமைத்து பணியாற்றவேண்டும்"
இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச்செயலாளர் சி.சிவகஜன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(17.01.2025) பல்கலைக்கழக பொங்குதமிழ் நினைவுத்தூபியில் பொங்குதமிழ் மக்கள் எழுச்சிப் பிரகடனத்தின் 24ம் ஆண்டு நாள் நிகழ்வுகளின்போது உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"திம்புக் கோட்பாடு, பொங்குதமிழ் பிரகடனம் என்பவற்றை நீர்த்துப்போகச் செய்வதன் ஊடாக தமிழ் மக்களின் விடுதலைவேட்கையினை இல்லாதொழித்து தமிழ்த்தேசிய நீக்கத்தினை முன்னெடுப்பதற்கு சிறிலங்காவின் ஆட்சிகள் முனைப்போடு பணியாற்றிக்கொண்டிருக்கின்றன.
ஆக்கிரமிப்புக்களாலும், அச்சுறுத்தல்களாலும் மேற்கொள்ளப்படமுடியாத தமிழ்த்தேசிய நீக்கத்தை தமிழ்த்தலைவர்கள் எனும் பெயரால் தமிழ்த்தேசியப் போலிகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக்கி அவர்களுடாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை நீக்கப்போகின்றோம் எனும் உரையாடலின் ஊடாக அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்றதொன்றை வலுமிக்கதொன்றாக காண்பிக்கும் தோற்றப்பொலிவை உருவாக்க சிறிலங்கா அரசு முனைப்புக்காட்டுகின்றது.
நல்லாட்சிக்காலத்தில் வரையப்பட்ட 'ஏக்கிய ராஜ்ஜிய' எனும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு வரைபினை தமிழ் மக்களின் பிரதிநிதிநிதிகளை ஏற்றுக்கொள்ளச் செய்வதனூடாக முன்னெடுப்பதற்கான முனைப்புக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியொன்றினை அமைத்து தமிழ் மக்களிற்கான தீர்வுத்திட்டமாக தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தினையே தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகள் முன்வைக்க வேண்டும் என்பதோடு 13வது அரசியலமைப்புத்திருத்தம் மற்றும் ஏக்கிய ராஜ்ஜிய வரைபுகளை முற்றாக எதிர்ப்பதற்கு முன்வரவேண்டுகின்றோம்.
தமிழ்த்தேசியம் தேர்தல் அரசியலிற்கு அப்பாலானதொன்று! தமிழ்த்தேசியக் கட்சிகள் மக்களாணையை மீறிய கடந்தகால செயல்களின் விளைவே அவர்களின் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களிற்கு ஏற்பட்ட ஆசனங்களின் குறைவிற்குக் காரணமாகும்.
அவர்களின் ஆசனங்களின் இருப்பானது ஒருபோதும் தமிழ்த்தேசியத்தின் இருப்பை பிரதிபலிக்கப் போவதுமில்லை, வீழ்ச்சியடையச் செய்யப்போவதுமில்லை! தமிழ்த்தேசியத்தை தேர்தல் அரசியலிற்கு அப்பால் மக்களை அரசியற்படுத்தி, அணிதிரட்டி மக்கள் அரசியலை முன்னெடுக்க தமிழ்த்தேசிய அரசியற்கட்சிகள் தவறிவிட்டன.
2009 இற்குப் பின்னர் தனியே அரசியல் விடுதலையை மட்டும் நோக்கிச் சிந்தித்தமையே பின்னடைவுகளிற்குக் காரணமாகும்.
சமூகவிடுதலை, பெண்ணிய விடுதலை, வர்க்க விடுதலை என்பவற்றில் கவனஞ்செலுத்தாமல் தமிழ்த்தேசிய எழுச்சியை வெளிப்படுத்தமுடியாது.
நாங்கள் அடையாள அரசியலிற்கு உரிய மக்கள் கிடையாது.
நாங்கள் இறைமை அரசியலை முன்னெடுப்பதற்குரிய, சுயநிர்ணய உரித்திற்குரிய தேசிய இனம்.
தற்போதைய ஜே.வி.பி அரசாங்கம் வலி.வடக்கில் காணி விடுவிப்புக்களை முன்னெடுக்காது தேசிய பொங்கல் நிகழ்வினை வலி.வடக்கிலேயே முன்னெடுக்கின்றமையானது தமிழ் மக்களை மடையர்களென்றெண்ணிச் செயலாற்றுவதாகும்."
என அவர் குறிப்பிட்டார்.
மேலும்
"செயல் அரசியலிற்கப்பால் இந்த ஜே.வி.பி அரசு செய்தி அரசியலை நம்பியே ஆட்சிக்கு வந்தது, ஆட்சியை நடத்துகின்றது.
ஒருசில வீதித்தடைகளை மட்டும் நீக்கிவிட்டு இராணுவத்திடமுள்ள காணிகளை விடுவித்துவிட்டதாக சமூக வலைத்தளங்களை நம்பி நுண்பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றது."
எனக்கூறியமை குறிப்பிடத்தக்கது.
