காணாமற்போன மீனவர் சடலமாக மீட்பு!
tamil news: திருகோணமலை, ஈச்சிலம்பற்று காவற்துறை பிரிவிலுள்ள துறைமுகத்துவாரம் களப்புக்கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர் காணாமல்போயிருந்த நிலையில் அவரது சடலம் இன்று(27.01.2025) காலை பிரதேச மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து சடலத்தை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் சம்பவ இடத்திற்கே சென்று பார்வையிட்டதுடன் சடலம் பிரேதபரிசோதனைகளூக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றையதினம்(26.01.2025) தோணியொன்றில் மீன்பிடிக்கச்சென்ற முகத்துவாரத்தைச் சேர்ந்த வடிவேல் மகேந்திரன்(வயது 53) என்னும் மீனவர் கடலில் காணாமற்போயுள்ளார்.
இந்நிலையில் அவரது சடலம் இன்று(27.01.2025) பிரதேச மீனவர்களால் மீட்கப்பட்டிருந்தது.
இவர் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகொன்று மோதி படகில் வந்தோர் தப்பித்துச்சென்றிருக்கலாம் இதனால் தோணி கடலில் புரண்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தோணியில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படகில் மீன்பிடியில் ஈடுபட்ட படகோட்டி மற்றும் உதவியாளர் உட்பட இருவரை ஈச்சிலம்பற்று காவற்துறை கைதுசெய்துள்ளனர்.
தொடர்ந்து மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவற்துறை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
