சுவிஸ் நாட்டில் திருட்டு; இலங்கை சிறுவன் உட்பட இருவர் கைது!
tamil news: சுவிஸ் நாட்டின் சோலத்தூண் மாநிலத்தில் மதுபானநிலையம் ஒன்றில் நேற்றையதினம்(25.01.2025) திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறை இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று(25.01.2025) சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் குடியிருப்பாளர் ஒருவர், ஓல்டனில் உள்ள கோஸ்கெர்ஸ்ட வீதியிலுள்ள ஒரு மூடப்பட்ட மதுபானநிலையத்திற்கருகில் இனம்தெரியாத இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிவதாக சோலோத்தூண் காவற்துறை நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து ஓல்டன் பிரதான புகையிரதநிலையத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வைத்து 2 சந்தேகநபர்களை சந்தேகத்தின்பேரில் தடுத்துநிறுத்தி விசாரணைகளை மேற்கொண்டபோது இவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் மற்றும் 15 வயதுடைய எரித்திரியன் நாட்டைச் சேர்ந்தவர் அடங்குவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த மதுபானநிலையத்தை உடைத்து திருடப்பட்ட சில பொருட்களை மீட்டுள்ளதாக தெரிவித்த காவற்துறையினர் மேலதிக விசாரணைக்காக இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
